புறநானூறு - 194

புறநானூறு - 194 வது பாடல்


விளக்கம் : 

இந்த உலகம் எப்படி பட்டதாம் ? அதன் இயல்பை உணர்ந்தோர் எதை காண்பராம் ?

ஒரு வீட்டில் சாவிற்கான பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில் மகிழ்ச்சி தரும் முழவின் சங்கீதம் ஒலிக்கிறது. ஒரு வீட்டில் மணமக்கள் பூமாலை சூடி மகிழ்கிறார்கள். மற்றொரு வீட்டிலோ உயிர் பிரிந்த துணையினால், தலைவி மையிட்ட கண்களில் நீர் கோர்த்து துன்புற்று வாடுகிறாள். இப்படி இரண்டும் கலந்த இனிமையற்ற இவ்வுலகை படைத்தவன் நிச்சயமாக பண்பில்லாதவனே. இருந்தபோதும் இவ்வுலகின் இயல்பை உணர்ந்தோர் அதிலுள்ள இனியதை மட்டும் காண்பர். 

பாடல் : 

ஓர் இல் நெய்தல் கறங்க, 
ஓர் இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணிய,
பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே.
                                                
~ பக்குடுக்கை நன்கணியார் 


சொல் விளக்கம் : 

👉 ஓர் இல் நெய்தல் கறங்க

ஓர் இல் - ஒரு வீட்டில்
நெய்தல் - நெய்தல் நிலத்திற்குரிய சாவு பறை
கறங்க - ஒலிக்க

👉 ஓர் இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப

ஓர் இல் - ஒரு வீட்டில்
ஈர்ந்தண் - இனிய மகிழ்வான
முழவு - தமிழரின் ஒரு வகையான இசைக்கருவி
பாணி - சங்கீதம்
ததும்ப - முழங்க

👉 புணர்ந்தோர் பூவணி அணிய

புணர்ந்தோர் - கூடினோர், மணமக்கள்
பூவணி - பூமாலை
அணிய - சூட

👉 பிரிந்தோர் பைதல் உண்கன் பனிவார்பு உறைப்ப

பிரிந்தோர் - உரியவனை இழந்தவள்
பைதல் - துன்பம்
உண்கண் - மை எழுதிய கண், மையிட்ட கண்
பனிவார்பு - நீர் வார்த்து
உறைப்ப - உதிர்க்க

👉 படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!

படைத்தோன் - படைத்தவன்
மன்ற - உறுதியாக [ஐயப்பாட்டை நீக்கி உறுதி செய்யும் பொருளில் வரும் ]
அப்பண்பிலாளன்- அந்த பண்பு இல்லாதவன்

👉 இன்னாது அம்ம, இவ்வுலகம்

இன்னாது - இனியது அன்று
அம்ம - கேளுங்கள், [ கேட்பிக்கும் பொருளில் வரும் ]

👉 இனிய காண்க! இதன் இயல்பு உணர்ந்தோரே.

இனிய காண்க - நல்லதை காணுங்கள்






Comments

Post a Comment

Popular posts from this blog

கம்பராமாயணம் - 02

உயிரெழுத்தும் ஓரெழுத்தும்