The earth = Pale blue dot
கார்ல் சாகன் ( Carl Sagan ) யார் என்று தேடித் தெரிந்து கொள்ளவும். கூடவே அவரை ஏன் 'Mr.X' என்று அழைக்கிறார்கள் ? என்பதையும் தேடித் தெரிந்து கொள்ளவும்.
பட உதவி : https://abhishake.wordpress.com/2013/10/07/alone-with-everybody/
( பூமியிலிருந்து 6.4 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் )
இங்கிருந்து பார்ப்பவர்களுக்கு, பூமி அவ்வளவு ஈர்ப்புள்ள ஒன்றாய் தோன்றாமல் போகலாம். ஏனெனில் பூமி அவர்களுக்கு, ஒரு சிறிய மங்கலான நீலப்புள்ளியாகவே தெரியும். ஆனால் நமக்கு பூமி அப்படியானது அல்ல. முற்றிலும் வித்தியாசமான ஒன்று. மீண்டும் ஒருமுறை அந்த மங்கலான நீலப்புள்ளியை பாருங்கள். அதுதான் நம் வீடு. அங்குதான் நாம் இருக்கிறோம். உங்களுக்கு பிடித்தவர்கள், தெரிந்தவர்கள், இதுவரை கேள்விப்பட்டவர்கள் என அது எந்த மனித உயிராக இருந்தாலும், அவர்கள் அங்கேதான் தங்களின் வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள்.
இன்பங்கள், துன்பங்கள், ஆயிரக்கணக்கான மதங்கள், சித்தாந்தங்கள், பொருளாதார கோட்பாடுகள், உழைத்து வாழ்பவர்கள், ஏமாற்றி வாழ்பவர்கள், வீரர்கள், கோழைகள், நாகரிகத்தை உருவாக்கியவர்கள், நாகரிகத்தை அழித்தவர்கள், அரசர்கள், விவசாயிகள், காதலர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், கண்டுபிடிப்பாளர்கள், உலகைச் சுற்றுபவர்கள், நியாயங்களை எடுத்துரைப்பவர்கள், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள், சிறந்த தலைவர்கள், துறவிகள், குற்றவாளிகளென இந்த மனித உயிர்களின் வரலாற்றில் யாரை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவர்கள் அனைவரும், சூரியனின் ஒளிக்கற்றையில் தேங்கிக் கிடக்கும் ஒரு சிறிய தூசின் மீதுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முடிவற்ற இந்த பிரபஞ்சவெளியில், நம் பூமி என்பது மிக மிகச்சிறிய பகுதி. அரசர்களாலும் படைத்தளபதிகளாலும் இங்கே ஓடிய ரத்த ஆறுகளை நினைத்துப்பாருங்கள். அதன் மூலம் அவர்கள் புகழும் வெற்றியும் பெற்றார்கள் தான். ஆனால் அவர்கள் கட்டி ஆண்டது பிரபஞ்சத்தை அல்ல. ஒரு சிறு புள்ளியை. சரி நிரந்தரமாகவா ? என்றால் அதுவும் இல்லை. தற்காலிகமாய். அச்சிறிய புள்ளியின் ஒரு மூலையில் இருப்பவர்களால் மறுமூலையில் இருப்பவர்களுக்கு நடந்தேறும் கொடூர சம்பவங்களைப் பாருங்கள். எப்படி அவர்கள் ஒருவரையொருவர் அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்கின்றார்கள் ? ஒருவரையொருவர் மாய்த்துக் கொள்வதற்கு அவர்கள் எவ்வளவு ஆர்வமாய் இருக்கின்றார்கள் ? அவர்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் வெறுப்பின் உச்சத்தை உங்களால் உணர முடிகிறதா ?
நமது வெளிப்பாடுகள், நமது கற்பனைகள், சுயத்திற்கான முக்கியத்துவம், இந்த பிரபஞ்சத்தில் முக்கியமானதொரு எண்ணம் என அனைத்தையும் அந்த சிறிய மங்கிய நீலப்புள்ளி கேள்விக்கு உள்ளாக்குவதோடு அசைத்துப்போடுகிறது. இந்த பூமியை நம்மிடமிருந்து காப்பாற்ற, எங்கிருந்தாவது எவரேனும் வருவார்கள் என்று சொல்வதற்கான அறிகுறி கூட இங்கே தென்படவில்லை. நிசம் நீங்கள் நினைப்பதுபோல் இல்லை. இப்பிரபஞ்ச பெருவெளியில் நாம் இங்கு தன்னந்தனியாக விடப்பட்டிருக்கிறோம்.
நாம் வாழ்வதற்கு உகந்த இடம் இப்போதைக்கு இந்த பூமி மட்டும்தான். இப்போது இல்லாவிட்டாலும், கண்டிப்பாக எதிர்காலத்தில் இடம்பெயர்வோம். பூமியை விட்டு வெளியே இதுவரை பயணித்திருக்கிறோமா ? எனக் கேட்டால் ஆம். இடம்பெயர்வோமா ? எனக் கேட்டால் இதுவரை இல்லை. உங்களுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ இப்போது நாம் வசிப்பது, வாழ்வது எல்லாமே இந்த பூமியின் மீதுதான்.
வானியல் ஒருவரை அமைதிப்படுத்துவதோடு அவர்களின் குணநலன்களையே மாற்றக்கூடியது என்பார்கள். பூமி புள்ளியாகக் காட்டும் இந்த காட்சி, மனிதர்களின் முட்டாள்தனத்தை மொத்தமாக எடுத்துரைக்கிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் கனிவுடன் இருக்க வேண்டிய அவசியத்தையும், சிறுபுள்ளியாய் தெரியும் நம் பூமியை பாதுகாத்துக் கொண்டாட வேண்டிய பொறுப்பையும் வானியல் எனக்கு அடிகோடிட்டு காட்டியது.
Comments
Post a Comment