Posts

Showing posts from October, 2018

நினைவக மரபணு (DNA data storage)

Image
கட்டுரை ஒருபக்கம் இருக்கட்டும்‌. முதலில் இந்த காணொளியைக் காணுங்கள். கருப்பும் வெள்ளையுமாக இருக்கும் ஒரு காணொளி. அவ்வளவு தானே ! இந்த காணொளியில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ? இந்த காணொளி தான் சிறப்பே. இது செயற்கை மரபணுவில் (Synthetic DNA) சேமிக்கப்பட்ட முதல் காணொளி. மேலும் இது, மனிதகுல பாரம்பரியத்தின் முக்கியமான வரலாற்றுப் பொருட்களை பாதுகாக்கும் யுனெஸ்கோவின் மெமரி ஆஃப் தி வேல்டு (UNESCO - Memory of the world) திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். ஒரு காலத்தில் கற்கள், ஓலைச்சுவ டியில் எழுதிக் கொண்டிருந்த மனித குலம் இன்று கைரேகையை விட ச் சிறிதான மெமரி கார்டில் சேமிக்கும் அளவு முன்னேறி இருக்கிறோம் என்பது முற்றிலும் ஆச்சரியமான நிதர்சன உண்மை. நினைவக சேமிப்பின் அடுத்த பரிமாணம் தான் நினைவக மரபணு. இயற்கை மரபணு : மனித செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து தகவல்களும் மரபணுவில் சேமிக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதனின் கண்களின் நிறம், தோலின் நிறம், பரம்பரை நோய் என யாவும் மரபணு வின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. நம் மரபணு நான்கு மூலக்கூறுகளால் ஆனது. ...

கம்பராமாயணம் - 02

விளக்கம் :  சத்தமிடும் பால் போன்ற கடலை,  பூனையொன்று தன் நாவால் நக்கி முழுதும் பருகிடத் துணிவது போல் ஆசை கொண்டு சொல்லத் தொடங்கினேன் இக்குற்றமற்ற, வெற்றி உடைய ராமனின் கதையை... பாடல் :  ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று. ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென. ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று. இக் காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! சொல் விளக்கம் : 👉 ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஓசை பெற்று - ஒலிகளைக் கொண்ட உயர் பாற்கடல் உற்று - உயர்வான பால் போன்ற கடலை அடைந்து 👉 ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ஒரு பூசை - ஒரு பூனை முற்றவும் - முழுவதையும் நக்குபு - நக்குதல் புக்கென - பு(க்)கு + என புகு - நுழைவது, செல்வது 👉 ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று அறையலுற்றேன் - அறையல் + உற்றேன் சொல்லத் தொடங்கினேன் மற்று - அசைநிலை. இதற்கு அர்த்தம் ஏதும் அகிடையாது. ஓசை நயத்திற்காக இங்கு சேர்க்கப்பட்டுள்ளது. 👉 இக்காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! இக்காசு - இந்த + ஆசு ஆசு - குற்றம் இல் - இல்லாத கொற்றம் - வெற்றி அரோ - அசைநிலை. இதற்கும் அர்த்தம் ஏதும் கிடையாது. ஓசை நய...

குறள் - 1086

காமத்துப்பால் > தகை அணங்கு உறுத்தல் #குறள் 1086 விளக்கம் :  அவளுடைய புருவம் எப்படி இருந்திருக்க வேண்டுமாம் ? கொடிய புருவம் வளையாமல் ( நேராய் இருந்து  அவளது கண்களை ) மறைந்திருக்க வேண்டுமாம்.  அப்படி இருந்திருந்தால் நடுங்க வைக்கும் கொடுந்துயரை அவளது விழி தந்திருக்காதாம். குறள் :  கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண் சொல் விளக்கம் :  👉 கொடும்புருவம் கோடா மறைப்பின் கொடும்புருவம் - கொடிய புருவம் கோடா - கோடு + அ கோடு - வளைந்த கோடா - வளையாமல் மறைப்பின் - மறைத்தால் இவளது கொடிய புருவம் வளையாமல் (நேராய் இருந்து) மறைக்குமானால்.....  👉 நடுங்கஞர் செய்யல மன்இவள் கண் நடுங்கஞர் - நடுங்கு + அஞர் அஞர் - கொடுந்துயரம் நடுங்க வைக்கும் கொடுந்துயரம் அல - அல்ல செய்யல - செய் + அல செய்யல - செய்யமாட்டா. மன் - ஒழியிசை இவள் கண் - இவளது விழி ....நடுங்கச் செய்யும் கொடுந்துயரை இவளது விழி எனக்கு தந்திருக்காது‌.

கம்பராமாயணம் - 01

⚠️ Disclaimer warning : கம்பராமாயணம் படிக்கப்பட வேண்டும் ராமனுக்காக அல்ல... கம்பனுக்காக... -------------------------- கம்பராமாயணம் > பால காண்டம் > கடவுள் வாழ்த்து பொருள் :  இங்குள்ள அனைத்து உலகையும் தன் சிந்தையால் படைப்பது, காப்பது, அழிப்பது என அனைத்தும் ஒரு முடிவில்லாத, அளவற்ற விளையாட்டாய் செய்யும் அவரே எங்கள் தலைவர். அப்படிப்பட்டவரிடமே நாங்கள் சரணடைகிறோம். பாடல் :  உலகம் யாவையும் தாம் உளவாக்கலும். நிலைப்பெறுத்தலும். நீக்கலும். நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார்-அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. சொல் விளக்கம் :  👉 உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் : யாவையும் - அனைத்தையும், தாம் - தன் உளவாக்கலும் - உள(ம்) + ஆக்கல் உளம் -சிந்தையால் படைத்தல் 👉 நிலைப்பெறுத்தலும். நீக்கலும் நிலைப்பெறுத்தல் - நிலைநிறுத்தல், காத்தல் நீக்கல் - நீக்குதல், அழித்தல் 👉 நீங்கலா, அலகு இலா விளையாட்டு உடையார் நீங்கலா - நீங்கு + இலா ; முடிவு + இல்லாத. அலகு இலா - அளவு + இல்லாத 👉 அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. அவர் தலைவர் - அவர்தான் தலைவர் அ...

குறள் - 1085

காமத்துப்பால் > தகை அணங்கு உறுத்தல் குறள் : 1085 பொருள் :  அவள் பார்வை எவற்றையெல்லாம் கொண்டுள்ளதாம் ? உயிரைக் கவர வந்த எமனின் பார்வை, அழகிய பெண்விழியின் பார்வை, மருண்டு நிற்கும் மானின் பார்வை என இம்மூன்றையுமே கொண்டுள்ளதாம். குறள் :  கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து சொல் விளக்கம் :  👉கூற்றமோ கண்ணோ பிணையோ கூற்றமோ - எமனோ கண்ணோ - விழியோ பிணை - பெண் மான் எமனோ ? பெண்விழியோ ? பெண்மானோ ?.... 👉 மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து மடவரல் - பெண் நோக்கம் - பார்வை மூன்றும் - மூன்றையும் உடைத்து - உடையது ....இப்பெண்ணின் பார்வை இம்மூன்றையுமே கொண்டுள்ளதே !!! 

குறள் - 1084

காமத்துப்பால் > தகை அணங்கு உறுத்தல் குறள் : 1084 பொருள் :  எவை ஒன்றுக்கொன்று மாறுபட்டு அமைந்திருக்கிறதாம் அப்பெண்ணிடம் ? பார்ப்பதற்கு, ஒன்றும் அறியாத அப்பாவி போல்  இருக்கிறாளாம். ஆனால் அவளது கண்களோ பார்ப்போரின் உயிரை உண்ணக்கூடியதாம். இப்படி அவளது கண்கள், அவளின் குணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அமைந்திருக்கிறதாம். குறள் :  கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப் பேதைக்கு அமர்த்தன கண். சொல் விளக்கம் :  👉கண்டார் உயிருண்ணும் கண்டார் - பார்ப்பவர் உயிருண்ணும் - உயிர் + உண்ணும் பார்ப்பவரின் உயிரை உண்ணுமாம்.... 👉தோற்றத்தால் பெண்தகைப் பேதைக்கு அமர்த்தன கண். தோற்றத்தால் - பார்ப்பதற்கு பெண்தகை - பெண் தன்மையுடன் பேதை - ஒன்றும் அறியாதவள், அசடு, அப்பாவி அமர்த்தன - மாறுபடுதல், பொருந்தாத பொருத்தம். ....அவளது கண்கள். ஆனால் பார்ப்பதற்கு அப்பெண் பேதை போல் இருப்பாளாம். என்ன ஒரு முரண் ? 

குறள் - 1083

காமத்துப்பால் > தகை அணங்கு உறுத்தல் குறள் : 1083 பொருள் :  இதற்கு முன்பு வரை, அவன் எமனை அறிந்ததில்லையாம். இப்போது அறிந்தானாம். அது எப்படி இருக்குமாம் ? பெரிய போர் ஒன்றை நிகழ்த்தும் கண்களை உடைய பெண் போன்று இருக்குமாம். குறள் :  பண்டறியேன் கூற்றுஎன் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு. சொல் விளக்கம் :  👉 பண்டறியேன் கூற்று என்பதனை பண்டறியேன் - பண்டு + அறியேன் பண்டு - முன்பு அறியேன் - அறிந்ததில்லை. கூற்று - எமன் எமனை முன்பு அறிந்ததில்லை.... 👉 இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு. இனியறிந்தேன் - இனி + அறிந்தேன் பெண்டகையால் - பெண் + தகையால் தகை - ஒப்பு, ஒத்த, பேரமர் - பெரிய + அமர் அமர் - போர் கட்டு - கண்களை உடையது. .....இப்போது அறிந்தேன். பெரிய போர் ஒன்றை நிகழ்த்தும் கண்களை உடைய பெண் போன்று இருக்கும்.

குறள் - 1082

இன்பத்துப்பால் > தகை அணங்கு உறுத்தல் குறள் : 1082 பொருள் :  இவன் பார்த்த பார்வைக்கு அவள் ஒரு எதிர்பார்வை பார்த்தால் அல்லவா ? அது எப்படி இருக்கிறதாம் ?  தாக்க வரும் தெய்வப்பெண் உடன் ஒரு படையையும் கூட்டிக்கொண்டு வருவது போல் இருக்கிறதாம்.  குறள் :  நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து. சொல் விளக்கம் :  👉 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் :  நோக்கினாள் - பார்த்தாள் நோக்கெதிர் - நோக்கு + எதிர் ; பார்த்த பார்வைக்கு பதில் பார்வை நோக்குதல் - பார்த்தல் இவன் பார்த்த பார்வைக்கு எதிர்பார்வை பார்த்தால் அல்லவா ? அந்த பார்வை.... 👉 தாக்கணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து :  தாக்கணங்கு - தாக்கு + அணங்கு  அணங்கு - தெய்வப்பெண். தாக்க வரும் தெய்வப்பெண்  தானை - சேனை, படை  கொண்டன்னது - கொண்டு + அன்னது  கொண்டு - கைக்கொண்டு, உடன்கொண்டு  அன்னது - போல்வது, போன்றது  உடைத்து - உரிமையாகக் கொண்டது ....தாக்க வரும் தெய்வப்பெண...

குறள் - 1081

இன்பத்துப்பால் > தகை அணங்கு உறுத்தல் குறள் : 1081 பொருள் : அவளைக் காணும்போது இவனது நெஞ்சுக்குள் குழப்பமாம். என்னவென்று ? இவள் தெய்வப் பெண்ணா ? சிறந்த மயிலா ? இல்லை கனமான தோடு அணிந்த பெண்ணா ? என்று... குறள் : அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. சொல் விளக்கம் : அணங்குகொல் : அணங்கு - தன் அழகால் வருத்தும் தெய்வப்பெண். கொல் - ஐயம் தன் அழகால் வருத்தும் தெய்வப்பெண்ணோ ? ஆய்மயில் கொல்லோ : ஆய்மயில் - ஆய் + மயில்; ஆய் - ஆராய்ந்து, அழகிய. இருக்கும் மயில்களில் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மயில். அழகிய மயில். சிறந்த மயிலோ ? கனங்குழை மாதர்கொல் : கனங்குழை - கனம் + குழை கனம் - கனமான குழை - காதணி, தோடு மாதர் - பெண் கொல் - ஐயம் கனமான தோடு அணிந்த பெண்ணோ ? மாலும் என் நெஞ்சு : மாலும் - மயங்குதல், குழப்பும் மயங்குகிறது என் நெஞ்சு.

முப்பாலும் மூவரும்

Image
முப்பால் சரி. திருக்குறளோட இன்னோரு புனைப்பெயர். அதென்ன மூவர் ? இப்பதிவில் கண்ணதாசன், கருபழனியப்பன், நான் என மூவர் சம்பந்தப்பட்டு இருப்பதால்‌.... பட உதவி 🙏 :  https://www.behance.net/gallery/22630881/ThiruKural-Posters நானும் திருக்குறள் படிக்க முயற்சி எடுத்து நிறைய முறை தோற்று இருக்கிறேன். அதற்கு இரு காரணங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். ஒன்று, வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் புரியாமை. மற்றொன்று திருக்குறளை அறத்தில் இருந்து படிக்கத் தொடங்கியது. திருக்குறள் படிப்பது பற்றி கண்ணதாசன் கூறியதாக கருபழனியப்பன் ஒரு உரையாடல் நிகழ்வில் கூறியிருந்தார். "  திருக்குறளை அறம் படித்து பொருள் படித்து இன்பம் படிக்க வைக்காதீர்கள். எவனும் படிக்கமாட்டான். உலகத்தில் மனிதன் தேடுவது இன்பம். இன்பத்தை முதலில் படிக்க வேண்டும். இன்பம் வேண்டுமானால் என்ன வேண்டும் ? பொருள் வேண்டும். பொருள் இருந்தால் தான் இன்பம் வரும். அதனால் இன்பத்தை முதலில் படிக்கச் சொல். பொருள் சம்பாதிக்க அறம் வேண்டும். அப்போது அறம் படிக்கச் சொன்னால் அனைவரும் படித்து முடித்துவிடுவார்கள் " அதே உரையாடலில் வள்ளுவன் குறித்து கரு...

பரியேறும் பெருமாள்

Image
பரியேறும் பெருமாள் : " A movie is made for the audience and a film is made for both the audience and the filmmakers. ~ David fincher. " பரியேறும் பெருமாள் மூவி கிடையாது. பிலிம்-ன்னு நினைக்கிறேன். இயக்குநருக்கும் இப்படம் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்களில் மாரி செல்வராஜ் முக்கியமானவராக கருதப்படுவர் என்பதில் துளியளவு கூட சந்தேகமில்லை. இந்த படத்தோட நிறைகள் மட்டும் பார்த்தால் எக்குத்தப்பா எகிறிக் கிடக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். படத்தின் மிகப்பெரிய பலமாக நான் பார்ப்பது வசனங்களையே. இரண்டாவது, இயக்குநர் தேர்ந்தெடுத்து இருக்கும் கதைக்களம். அதற்காகவே எழுந்து நின்று ஒருமுறை அவருக்கு கைத்தட்டலாம். வசனமும் மாரி செல்வராஜே தான் எழுதி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். படத்திற்கு இசையமைத்த சந்தோஷி பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. வழக்கம் போல்  பிரித்திருக்கிறார்.  யோகி பாபு தன்னை குணச்சித்திர நடிகராக மறுமுறை ஒருமுறை நிலைநாட்டி இருக்கிறார். தாத்தாவாக நடித்திருக்கும் கராத்தே வெங்கடேஷிம் கவனம் ஈர்க்கிறார். ஆன...